Monday, March 24

புரூஸ் லீயின் பிம்பமாக வளர்ந்திருக்கும் புதிய புரூஸ் லீ

Loading

வந்தவாசி கே.அமான் எஸ்.கே.பிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் புதிய புரூஸ் லீ படத்தை அறிமுக இயக்குநர்  முளையூர் ஏ.சோனை இயக்கியிருக்கிறார். படத்தின் கதை வசனம் ஆகியவற்றையும் இவரே எழுதியிருக்கிறார். இப்படம் குறித்து இயக்குநர் கூறியதாவது…
புரூஸ் லீயின் தீவிர ரசிகனான எனக்கு அவரைப்போல் சாயல் கொண்ட புரூஸ் ஷான் என்ற இளைஞரைப் பார்த்ததும் அவரை வைத்தே ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. மேலும் அவர் கராத்தேயில் இரண்டு பிளாக் பெல்ட் வாங்கியவர் என்று தெரிந்ததும் கண்டிப்பாக அது என் படத்துக்கு பலம் சேர்க்கும் என்று நினைத்து அதற்காகவே ஒரு கதையை உருவாக்கினேன்.
கிராமத்தில் இருக்கும் நாயகன் ஒரு பாதிப்பினால் தன் குடும்பத்தை இழக்கிறான். மன ஆறுதலுக்காக நகரத்தில் உள்ள தூரத்து உறவினரான மாமா வீட்டிற்கு அழைத்து வரப்படுகிறான். அங்கு அவனது மாமா ஒரு பெரிய பிரச்சினையில் சிக்கியிருப்பதை உணர்ந்து அந்தப் பிரச்சினையை தனது சண்டை திறமையால் தீர்த்துவைத்துவிட்டு ஊருக்குத் திரும்புகிறான். இதுதான் இந்தப் படத்தின் கதை.

கதையின் நாயகனாக சான் இருந்தாலும், எனக்கு நினைவில் இருந்ததெல்லாம் நான் நேசிக்கும் புரூஸ்லீதான். அவர் நடை, உடை, பாவனை.. அவர் உணர்வுகளை வெளிப்படுத்தும்விதம்.. அனைத்தையும் நான் ரசிக்கும் அளவுக்கு சானிடம் இருந்து வெளிக்கொணர்ந்திருக்கிறேன்.
குறிப்பாக சண்டை காட்சிகளில் புரூஸ்லீ வெளிப்படுத்திய வீரத்தை இதில் கையாண்டிருக்கிறேன். என் எண்ணத்தை முழுமையாகப் புரிந்து கொண்ட சண்டை பயிற்சியாளர் ‘த்ரில்’ சேகர் மிகச் சிறப்பாக சண்டை காட்சிகளை அமைத்துக் கொடுத்திருக்கிறார். சண்டை காட்சிகளை நீங்கள் பார்க்கும்போது நிச்சயமாக உங்கள் மனக்கண்ணில் புரூஸ்லீ தோன்றுவார் என்பது மட்டும் உண்மை.

புரூஸ்லீயாக ஒருவரைக் காட்டும்போது அவருடன் சண்டையிடும் வில்லன் மற்றும் சண்டை வீரர்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதை யோசித்து மிகவும் கவனமாக  தேர்வு செய்துள்ளோம்.

இந்தப் படத்தில் சுரேஷ் நரங் என்பவர் சர்வதேச கிரிமினல் பிஸினஸ்மேனாக வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சிக்காக ஜிதேந்திர ஹூடாவை மும்பையிலிருந்து வரவழைத்து நடிக்க வைத்திருக்கிறோம். அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

படத்தில் மூன்று பாடல்கள் இருக்கின்றன. மூன்று பாடல்களையும் நானே எழுதியிருக்கிறேன். மூன்றுமே இசை ரசிகர்களையும், சினிமா ரசிகர்களையுமே கவரும் வகையில் அருமையான இசையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
படத்தின் ஒளிப்பதிவு இயக்குநராக முத்திரை பதித்திருப்பவர் சிவசங்கர். ராபர்ட் மற்றும் மனோஜ் இருவரும் பாடல் காட்சிகளை அமைக்க படத்தொகுப்பை செய்திருப்பவர் கே.தங்கவேல்.

மொத்தத்தில் இந்த ‘புதிய புரூஸ்லீ’ திரைப்படம் கண்டிப்பாக புரூஸ்லீயின் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியமான ஆக்சன் விருந்தாக அமையும்…” என்றார் இயக்குநர் முளையூர் ஏ.சோனை.