காவல்துறை உங்கள் நண்பன்

0

 298 total views,  1 views today

சினிமாவில் அழகான மற்றும்  இனிமையான குரல் எப்போதுமே ஒரு நடிகைக்கு முக்கியமான அங்கமாக இருக்கிறது. தன்னுடைய தனித்துவமான உச்சரிப்புகளால், பல முன்னணி கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்த ரவீணா ரவி, தற்போது நடிகையாகவும் மாறியிருக்கிறார். இனிமையான குரல் மட்டுமல்லாமல், அதை எப்படி சிறப்பாக பேசுவது என்பதில் ரவீணா ஒரு மாஸ்டர். அவர் கூறும்போது, “படங்களுக்கு டப்பிங் செய்வதில் சில சவால்கள் உள்ளன. நாம் டப்பிங் பேசும் பெண் கதாபாத்திரங்களின் இயல்புகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் எந்த காட்சிக்கு எப்படி பேச வேண்டும் என்பது நமக்கு கச்சிதமாக தெரியும். 2.0 படத்தில் ஏமி ஜாக்சனுக்கு டப்பிங் செய்தது மிகப்பெரிய சவாலாக இருந்தது. காரணம், நான் டப்பிங் பேசும்போது, அது முழுக்க க்ரீன்மேட்  காட்சிகளாக இருந்தது. அதன் சூழலை கற்பனை செய்து சரியான உணர்வை கொடுக்க நிறைய சிரமப்பட்டேன்” என்றார். 
 
டப்பிங்கில் தனது பல சவால்களை பற்றி பேசிய ரவீணா, காவல்துறை உங்கள் நண்பன் படத்தில் நடித்த சவாலான அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். “என் முதல் படமான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. கதாநாயகனின் மனைவியாக, வேலைக்கு போகும் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நான்  நடித்திருக்கிறேன். என் வாழ்வில் நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் வாழ்க்கையின் போக்கை மாற்றுகிறது. உண்மையாக என் வாழ்க்கையில் அத்தகைய சூழ்நிலைகளை நான் எதிர்கொண்டதில்லை. அதனால் நடிப்பு பயிற்சி மூலம் என்னை தயார் செய்ய வேண்டியிருந்தது” என்றார் ரவீணா. 
 
இந்த படத்தில் ஒரு நாயகன் சுரேஷ் ரவிக்கும், ரவீணாவுக்கும் இடையே ஒரு அழகான காதல் பாடல் உள்ளது. அவர்களின் கெமிஸ்ட்ரியை பற்றி மொத்த படக்குழுவே பாராட்டி வருகிறது. 
 
“சமகால உலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து காவல்துறை உங்கள் நண்பன் படம் பேசுகிறது. ஆனாலும், ஒரு சாதாரண மனிதனுக்கும், காவல்துறை அதிகாரிக்கும் இடையேயான பிணைப்பு படத்தின் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சமாக இருக்கும். 
 
சுரேஷ் ரவி மற்றும் ரவீணா ரவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, ஆர்.டி.எம் படத்தை இயக்கியிருக்கிறார். மைம் கோபி, கல்லூரி வினோத் மற்றும் சில பிரபல நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பி.ஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன் மற்றும் வைட் மூன் டாக்கீஸ் இணைந்து தயாரித்திருக்கிறது. ஆதித்யா சூர்யா (இசை), விஷ்ணு ஸ்ரீ (ஒளிப்பதிவு), வடிவேல், விமல்ராஜ் (எடிட்டர்) மற்றும் ராஜேஷ் (கலை) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்திருக்கிறார்கள்.

 

Share.

Comments are closed.