நடிகர் தம்பி ராமைய்யா மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகும் அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற படத்தின் டீசர் வெளியீட்டு விழாவும் பத்திரிகையாளர்கள் சந்திப்பும் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயனை இளைய சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டார்.
பின்னர் பேசிய சிவகார்த்திகேயன், இங்கு பேசிய சிலர் எனக்கு சில பட்டங்களைக் கொடுத்தார்கள். ஆனால் அதை நான் என் வாயால் சொல்ல மாட்டேன். காரணம் இது போன்ற பட்டங்களிலிருந்து விலகியிருக்கவே நான் விரும்புகிறேன். மக்களா மகிழ்விப்பதுதான் என் வேலை. எனது படங்கள் மக்களுக்குப் பிடித்திருந்தால் அதுவே எனக்குப் போதும் என்றார்.
மற்றொரு சிறப்பு விருந்தினரான இயக்குநர் பிரபு சாலமன், புதுமுக நாயகன் உமாபதியின் நடனத் திறமையை வியந்து பாராட்டியதுடன், நாகேஷ் மகன் ஆனந்த்பாபு எப்படி நடனத்தில் முத்திரை பதித்த நடிகராகப் புகழ் பெற்றாரோ அதுபோல் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் நடனத்தில் முத்திரை பதிக்கும் நட்சத்திரமாக திரைவானில் ஜொலிப்பார் என்று வாழ்த்தியதுடன், சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக அமையும்போது உமாபதியை வைத்து நடனத்துக்கு முக்கியத்துவமளிக்கும் படம் ஒன்றை தானே இயக்குவேன் என்றும் தெரிவித்தார்.
விழாவில் இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார், துரை.செந்தில்குமார், நடிகர் பொன்வண்ண ன் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் பலரும் உமாபதியை வாழ்த்திப் பேசினார்கள்.