780 total views, 1 views today
வித்தியாசமான கதை களங்கள் கொண்ட திரைப்படங்களுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வரிசையில் தற்போது இணைய தயாராக இருக்கின்றது, அறிமுக இயக்குநர் அஷோக் இயக்கி இருக்கும் ‘பீச்சாங்கை’ திரைப்படம். இந்த படத்தை ‘கர்ஸா என்டர்டைன்மெண்ட்’ சார்பில் ஆர் எஸ் கார்த்திக் மற்றும் ‘பி ஜி மீடியா ஒர்க்ஸ்’ சார்பில் பி ஜி முத்தையா ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கின்றனர்.
புதுமுகங்கள் கார்த்திக் மற்றும் அஞ்சலி ராவ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த ‘பீச்சாங்கை’ படத்தில் எம் எஸ் பாஸ்கர், விவேக் பிரசன்னா, பையா பொன்முடி, ஜோசப், கிரிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி ஒளிப்பதிவாளர் கெளதம் ராஜேந்திரன் (அறிமுகம்), இசையமைப்பாளர் பால முரளி பாலு (அறிமுகம்) மற்றும் படத்தொகுப்பாளர் (அறிமுகம்) ஜோமின் மேதில் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த ‘பீச்சாங்கை’ படத்தில் பணியாற்றி வருவது மேலும் சிறப்பு.
“அறிமுக கலைஞர்கள் திரையுலகில் வெற்றி காண்பது என்பது சற்று சவாலான காரியம் தான். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் தரமான படங்களுக்கும், திறமையான கலைஞர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பு இருக்கின்றது. அந்த வகையில் அவர்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக பூர்த்தி செய்து, எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய திரைப்படமாக எங்களின் பீச்சாங்கை படம் இருக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பீச்சாங்கை படத்தின் கதாநாயகன் கார்த்திக்.
“இந்த 2017 ஆம் ஆண்டு இளம் திறமையான கலைஞர்களுக்கான ஆண்டு. அறிமுக இயக்குநர்களால் உருவாக்கப்பட்டு, சமீபத்தில் வெளியான பல படங்கள் ரசிகர்களின் உள்ளங்களை கவரந்தது மட்டுமின்றி, சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளையும் அதிகளவில் பெற்று இருக்கின்றது. நிச்சயமாக அந்த படங்களின் வரிசையில் இந்த பீச்சாங்கை படமும் இடம் பெறும். கதாநாயகனாக அறிமுகமாகும் கார்த்திக்குக்கும், இயக்குநராக அறிமுகமாகும் அஷோக்கிற்கும் இந்த பீச்சாங்கை சிறந்ததொரு திரைப்படமாக இருக்கும்” என்று உற்சாகமாக கூறுகிறார் இரண்டு முறை தேசிய விருது பெற்ற எழுத்தாளர் தனஞ்ஜயன் கோவிந்த்.