நட்சத்திர அந்தஸ்த்துள்ள நடிகர் நடிகைகள் நடித்த பல படங்களே திரைக்கு வந்த பிறகும், தொலைக்காட்சி ஒளிபரப்பு விற்பனையாகாமல் திணறிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில், புதுமுகங்களை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு படத்தின் கதையை சொல்லியே, அந்தப் படத்தின் இயக்குநர் தொலைக்காட்சி உரிமத்தை விற்றிருக்கிறார் என்றால் அது எவ்வளவு பெரிய சாதனை. இந்த சாதனையை நிகழ்த்திய இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர். படத்தின் பெயர் பள்ளிப்பருவத்திலே.
அரசு பள்ளிகள் அருகிவரும் சூழலில், தனியார் பள்ளிகள் செழித்தோங்கி வளர்ந்து வருகின்றன. ஆனால் தஞ்சை மாவட்டத்திலுள்ள ஒரத்த நாடு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்த அரசு பள்ளியில் ஆசிிரியராக இருந்த சாரங்கன் என்ற ஆசிரியர் தனது புனிதப் பணியில் எப்படி பல மாணவர்களை சிறந்த குடிமக்களாக உருவாக்கினார் என்ற உண்மைக் கதையை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகியிருக்கிறது.
ஆசிரியர் சாரங்கன் வேடத்தில் நடிப்பதற்காக இந்தப்படத்தின் கதையை முதலில் கே.எஸ்.ரவிகுமாரிடம் சொன்னபோது, கண்டிப்பாக இந்தப் படத்துக்கு விருது கிடைக்கும் என்று சொல்லி மகிழ்ச்சியுடன் அந்த வேடத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.
பின்னர் பாடல் எழதுவதற்காக கவிப்பேரரசு வைரமுத்துவிடம் சொன்னபோது அவரும் கண்டிப்பாக விருது வாங்கப் போகும் படம் இது என்று சொல்லியிருக்கிறார்.
பள்ளிப்பருவத்திலே படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதைத் தெரிவித்த படத்தின் இயக்குநர் வாசுவேவ் பாஸ்கர், விருது கிடைத்தால் மகிழ்ச்சி என்றாலும் விருது பெற வேண்டும் என்பதற்காக நான் படமெடுக்கவில்லை. என்னுடைய தயாரிப்பாளருக்கு போட்ட காசுக்கு மேல் லாபம் கிடைக்க வேண்டும். அவர் மீண்டும் படம் தயாரிக்க வேண்டும். அதுதான் என் நோக்கம் என்றார்.
சுமார் எண்பது படங்களுக்கு இசையமத்த சிற்பியின் மகன் நந்தன்ராம் கதைநாயகனாக அறிமுகமாக, நாயகியாக நடிக்கிறார் புதுமுகம் வெண்பா. இவர் கற்றது தமிழ் படத்தில் சின்ன வயது அஞ்சலியாக நடித்தவர். மற்றும் ஊர்வசி, தம்பி ராமைய்யா பொன்வண்ணன், க்ஞ்சா கருப்பு, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
விருது பெறும் படங்கள் எல்லாம் வணிக ரீதியில் வெற்றியடையாமல் தோல்வியைத் தழுவும் என்பதெல்லாம் அந்தக் காலம். சமீபகாலமாக வரும் பல தரமான படங்கள் வணிக ரீதியில் வெற்றி பெறுவதோடு, விருதுகளையும் தட்டிச் செல்கின்றன.
பள்ளிப் பருவத்திலே படம் வெற்றிகளைக் குவித்து விருதுகளையும் வெல்லும் என்றுதான் தோன்றுகிறது.