தொடர்ந்து படங்களை இயக்கவே விரும்புகிறேன் – இயக்குநர் டீகே

0

 299 total views,  2 views today

‘யாமிருக்க பயமே’ , ‘கவலை வேண்டாம் ’ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் டீகே ‘காட்டேரி ’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அத்துடன் விஜய் சேதுபதி நடித்த ‘சீதக்காதி ’  படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். புதிய படத்திற்கான திரைக்கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தவரை சந்தித்தோம்.
 
இயக்குநரகம் இருந்த நீங்கள் சீதக்காதி படத்தின் மூலம் நடிகராகவும் ஆகியிருக்கிறீர்கள். அது குறித்து ?
நடிப்பது என்பது இயக்குவதை விட கடினமாகவே இருந்தது. என்னை நடிகராக்கியதில் பெரும் பங்கு அல்ல முழு பங்கும் இயக்குநர் பாலாஜி தரணீதரனைத் தான் சாரும். ‘நடுவுல கொஞ்சம் பாக்கம் காணோம் ’ என்ற படத்தை பாலாஜி இயக்குவதற்கு முன்பிருந்தே நாங்கள் நல்ல நண்பர்கள். உதவி இயக்குநராக பணியாற்றிய போதும் எங்களின் நட்பு தொடர்ந்தது. அவருடைய இயக்கத்தால் நான் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. இது போன்றதொரு வாய்ப்பு இருக்கிறது என்று அழைத்தார். படபிடிப்பு தளத்திற்கு சென்றுவிட்டேன்.  பிறகு காமிரா முன்பு நின்று இயக்குநரின் எதிர்பார்ப்பை முகத்தில் கொண்டு வருவது எவ்வளவு கடினமாக செயல் என்பதை நான் உணர்ந்தேன். இரண்டு படங்களை இயக்கியிருந்தாலும், நடிகர்களிடம் காட்சிகளை விளக்கிவிட்டு நாம் நமக்கான தருணத்திற்காகக் காத்திருப்போம். அதேப் போல் இந்த படத்தில் எனக்கும் நடந்தது. இந்த படத்தின் மூலம் சில விசயங்களை நான் கற்றுக்கொண்டேன்.
 
தொடர்ந்து நடிப்பீர்களா..?
 
தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டவிரும்பவில்லை. ‘சீதக்காதி ’ நண்பருக்காக நடிக்க ஒப்புக்கொண்டேன். தொடர்ந்து இயக்குவதில் தான் கவனம் செலுத்தி வருகிறேன். அதே சமயத்தில் பாலாஜி போன்ற என்னுடைய நண்பர்கள் அவர்களின் படத்தில் நடிக்க வாய்ப்பளித்தால் நடிப்பை தொடரலாம்.
 
காட்டேரி எப்படி வந்திருக்கிறது ?
 
ரொம்ப அற்புதமாக வந்திருக்கிறது. இன்னும்  சொல்லப்போனால் என்னுடைய முதல் படம் காட்டேரி என்று சொல்லலாம். ஏனெனில் நான் இதற்கு முன் இயக்கிய இரண்டுப் படங்களைக் காட்டிலும், இந்த படத்தில் தான் நான் நினைத்ததை நினைத்தமாதிரி படமாக்க முடிந்தது. தயாரிப்பு தரப்பிலிருந்து எந்த அழுத்தமோ, நெருக்கடியோ எனக்கு கொடுக்கப்படவில்லை. நான் என்ன கதையை சொன்னேனோ அதை அப்படியே எடுத்துக் கொடுத்திருக்கிறேன். இதையே தான் படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி பார்த்துவிட்டு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சாரும் சொன்னார்கள். 
 
இதனை சாதாரண ஹாரர் படமென்றோ, காமெடி கலந்த ஹாரர் படமென்றோ நினைத்துவிட வேண்டாம். அதையும் கடந்து ரசிகர்களை கவரக்கூடிய வித்தியாசமான அம்சம் ஒன்று படத்தில் இடம்பெற்றிருக்கிறது. பொதுவாக ஹாரர் ஜேனருக்குள் பல வெரைட்டி இருக்கிறது. அதில் ஒன்று தான் காட்டேரி. ஆறு வயது குழந்தை முதல் அறுபது வயது வரை  உள்ள அனைத்தினருக்கும் இந்த காட்டேரி பிடிக்கும். படம் முடிவடைந்துவிட்டது. வெளியீட்டிற்கு பொருத்தமான தேதிக்காகவும், திரையரங்கத்திற்காகவும் காத்திருக்கிறோம்.
 
இந்நிலையில் ‘காட்டேரி’ படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோர், பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய், குட்டி கோபி என பலர் நடித்திருக்கிறார்கள். விக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு எஸ் என் பிரசாத் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குநர் டீகே இயக்கியிருக்கிறார்  என்பதும் குறிப்பிடத்தக்கது.


Share.

Comments are closed.