நெடுஞ்சாலை, மாயா ஆகிய வெற்றிப்படங்களின் கதாநாயகன் நடிகர் ஆரி. இவர் தற்போது இசாக் இயக்கி வரும் நாகேஷ்திரையரங்கம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு திண்டிவனத்தில் மிகப்பிரம்பாண்டமான தியேட்டர் செட்டில் நடைபெற்றது. அப்போது நடந்த ஒரு சம்பவத்தால் நடிகர் ஆரி இயக்குனரையும் தயாரிப்பாளரையும் சிலிர்க்க வைத்தார். படப்பிடிப்பின் இறுதி நாளன்று நடிகர் ஆரியின் தாயார் இறந்து விட்டார். இதைக்கேள்விப்பட்ட மொத்த யூனிட்டும் கலங்கிப்போக, இயக்குனருக்கு இடி விழுந்தது போல சோகம். அன்று நடந்த சம்பவத்தை இயக்குனரே விவரிக்கிறார். “அன்னைக்கி டபுள் கால்ஷீட் ப்ளான் பண்ணிருந்தோம். காலையில ஆரம்பித்து நைட்டுக்குள்ள எல்லா சீக்வென்ஸையும் எடுத்தாக வேண்டிய கட்டாயம். ஏன்னா நாங்க போட்ருந்த செட்டோட பட்ஜெட் அப்படி. சூழ்நிலை இப்படி இருக்க, சம்பவம் கேள்விப்பட்டதும் எங்களுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. எங்க தயாரிப்பாளர் போன் பண்ணி, பணம் போனா போகட்டும். முதல்ல நீங்க போயி இறுதி காரியத்த பாருங்க”ன்னு சொன்னார். நானும் அதையே சொன்னேன். ஆனா ஆரி, “சார் இன்னைக்கி சினிமாவுக்கு நடிகரா ஆகணும், இயக்குனரா ஆகணும்னு தான் நிறைய பேர் வர்றாங்க. தயாரிப்பாளரா ஆகணும்னு யாருமே வர்றதில்ல. நம்மள நம்பி ஒரு தயாரிப்பாளர் வந்திருக்கிறார். நான் இன்னைக்கி நடிக்காம போனா அவருக்கு 25 லட்சம் ரூபா நஷ்டமாகும். நிச்சயமா இதை என் அம்மாவோட ஆன்மா ஏத்துக்காது சார். அதனால என் அம்மாவோட இறுதிச்சடங்க நான் ஒருநாள் தள்ளி வச்சிக்கிறேன்”ன்னு சொன்னார். எனக்கு ஆரியை நினைத்து கண்ணீரே வந்துட்டு. ஏன்னா இந்த உலகத்துல உள்ள உறவுகள்லே பெரிய உறவு தாய். ஒரு தாய்க்கு மகன் செய்ய வேண்டிய முக்கியமான கடமையைக் கூட தான் நேசிக்கும் சினிமாவுக்காக தள்ளி வச்ச நடிகர் ஆரி தமிழ்சினிமாவோட பொக்கிஷம்.