Thursday, June 18

அதர்வா முரளியுடன் ஜோடி சேரும் லாவண்யா திரிபாதி!

Loading

அதர்வா முரளி நடிப்பில் புதுமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நாயகியாக நடிகை  லாவண்யா திரிபாதி ஒப்பந்தமாகியுள்ளார்.

படம் குறித்து இயக்குநர் ரவீந்திர மாதவா கூறியது…

எங்கள் படத்திற்கு ஹீரோயின் தேர்ந்தெடுப்பது என்பது மிகக் கடினமான பணியாக இருந்தது. இப்படத்தின் நாயகி பாத்திரத்தை முழுமையாக வடிவமைத்த பிறகு இக்கதாப்பாத்திரத்தில் நடிக்க நல்ல கவர்ச்சியான, மென்மை மிகுந்த நேர்த்தியான, நாயகியாக இருக்க வேண்டும் தேடினோம். அதே நேரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கும் திறமையும் வேண்டும் என்று நினைத்தோம். கண்மூடித் திறக்கும் நேரத்தில் வந்து போகக்கூடிய பாத்திரம் அல்ல இது. படம் முழுதும் பயணம் செய்யும் அழுத்தமான சக்தி வாய்ந்த பாத்திரம். யோசித்துகொண்டிராமல் தெளிவாக முடிவை எடுக்கும் பாத்திரம். மற்றவர்கள் மீது வலியை திணிக்கும் படத்தின் வில்ல பாத்திரத்தை  நேரடியாக கேள்விக்குள்ளாக்கும் கனமான பாத்திரம். இத்தனை குணங்கள் நிறைந்த வலுவான பாத்திரத்திற்கு பல ஹீரோயின்களை யோசித்து அலசி,  அவர்களை  தேர்வு செய்ய கருத்தில் கொண்டோம். அத்தனையும் கடந்து தான் இறுதியாக லாவண்யா திரிபாதியை இந்த கதாப்பாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தோம். இந்தப்படம் அவருக்கு ஒரு முக்கியமான படமாக இருக்குமென்பது உறுதி என்றார்.

இயக்குநர் ரவீந்திர மாதவா ஒரு MBA பட்டதாரி. புகழ்மிகு இயக்குநர்களான பூபதி பாண்டியன், சுசீந்திரன், கொரட்டால சிவா ஆகியோரிடம் பணியாற்றியவர். இப்படத்தில் அதர்வா முரளி நாயகனாக நடிக்கிறார், வில்லனாக நடிக்க,  நடிகர் தேர்வு நடைபெற்று வருகிறது. சக்தி சரவணன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை  கலை  செய்ய, சரவணன் சண்டை பயிற்சி இயக்கம் செய்கிறார். கலை இயக்குநராக ஐயப்பன் பணியாற்றுகிறார்.