“சைக்கோ” வெற்றி விழா ! 

0

 412 total views,  1 views today

Double Meaning Production சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் “சைக்கோ” திரைப்படத்தை இயக்குநர் மிஷ்கின் எழுதி இயக்கியிருந்தார். 
உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் 
இயக்குநர் ராம், ரேணுகா, ஷாஜி, ஆடுகளம் நரேன், சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடங்களில்  நடிதிருந்தனர். கடந்த வாரம் வெளியான  இப்படம் விமர்சகர்களிடம் பெரும் அதிர்வலைகளை கிளப்பி,  ரசிகர்களிடம் பேராதரவு பெற்று வெற்றியடைந்துள்ளது. 
 
படம் முழுதும் குவிந்திருக்கும் குறியீடுகள் கொண்ட ஆழ்ந்த திரைக்கதை, உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனனின் வித்தியாச நடிப்பு என “சைக்கோ” படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதனையடுத்து இன்று “சைக்கோ” படக்குழு வெற்றியின் நிமித்தம் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். 
 
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் அருண்மொழிமாணிக்கம் பேசியது…
 
பத்திரிக்கை நண்பர்களுக்கும் மக்களுக்கும் நன்றி சொல்லவே இந்த நிகழ்வு. இந்த படத்தை உதயநிதி நினைத்திருந்தால் அவரே தயாரித்திருக்கலாம் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இப்படத்தை அழகாக வடிவமைத்து எடுத்ததற்கு மிஷ்கின் அவர்களுக்கு நன்றி. படத்தில் நடித்து பங்காற்றிய அனைவருக்கும் நன்றி. 
 
 
நடிகர் பாவா செல்லத்துரை பேசியது…
 
எனக்கு தெரிந்து தமிழ் சினிமாவில் உயிருக்கு அதிகமான நேசிப்பையும், இந்தப்படம் நல்லா இல்லை  என சரிபாதியாக எதிரெதிர் விமர்சனம் வந்தது இந்தப்படத்திற்குதான். மிஷ்கின் படங்களில் உலகம் வேறு. அவர் திரையில் வாழ்வை சீட்டுக்கட்டை போல் பிரித்து போடுகிறார். அதில் நீங்கள் லாஜிக் தேடக்கூடாது. இந்தப்படம் மிஷ்கின் படம். அவரது சாயல் தான் படம் முழுதும் இருக்கும். அவர் கதாப்பாத்திரங்களை வித்தியாசமாக அணுகுகிறார். பாண்டியராஜன், பாக்கியராஜ் என நமக்கு தெரிந்த நடிகர்களை நாம் அவர்களை பார்க்காத கோணத்தில் காட்டுகிறார். நேரடி வாசகர்களுக்கு இந்தப்படம் நிறைய தடுமாற்றங்கள் தரும். மிஷ்கின் இப்படத்திற்குள் பல நுட்பங்களை நிகழ்த்தியிருக்கிறார். தமிழ் சினிமா மறக்க முடியாத படம் தந்த என் நண்பன் மிஷ்கின் அவர்களுக்கு என் வாழ்த்துகள். 
 
 
நடிகர் சிங்கம் புலி பேசியது….
 
எல்லா இயக்குநருடனும் நடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லா நடிகருக்கும் இருக்கும்.  அந்த ஆசை இந்த ஆண்டு எனக்கு நிறைவேறியிருக்கிறது. மிஷ்கினை  எப்படி அணுகுவது எனும் தயக்கம் இருந்தது. ஆனால் வாய்ப்பு தேடி வந்தது. இப்போது அவரது படத்தில் நடித்தது பெருமை. என்னை எப்படி இப்படி மாற்றினார் எனத் தெரியவில்லை. அவர் சொன்னதை மட்டுமே செய்தேன். ஆனால் வித்தியாசமாக இருந்தது. இந்த ஆண்டில் எல்லோரும் ரசிக்கும் படத்தை தந்திருக்கிறார். சைக்கோவை வைத்து “கருப்பு கண்ணாடி” என படம் ஆரம்பிப்பதாக இன்று படித்தேன். இனி மிஷ்கின் பற்றி படங்கள் வரத்தான் செய்யும். அவர் வெற்றி பெற்றிருக்கிறார். நான் இந்தப்படத்தில் நடித்த அனைத்து காட்சிகளும் வந்திருந்தது.  அவ்வளவு திட்டமிடலுடன் படத்தை எடுத்துள்ளார். இந்தப்படம் நடித்தது எனக்கு பெருமை. இப்படத்தை ஆதரித்த அனைவருக்கும் நன்றி.
 
 
நடிகர் ஷாஜி பேசியது…. 
 
மிஷ்கினின் “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” படத்தில் நடிக்க கூப்பிட்டார். எனக்கு நடிக்க தெரியாது என்றேன். என் படத்தில் யாரும் நடிப்பதில்லை வாருங்கள் எனக் கூட்டிப்போனார். இந்தப்படம் லாஜிக் இல்லை என சொல்பவர்கள் மிஷ்கினுக்கு தெரியாமல் நடந்திருப்பாதாக நினைக்கிறார்கள் ஆனால் மிஷ்கின் படத்தில் மிஷ்கினுக்கு தெரியாமல் எதுவும் நடப்பதில்லை. இந்தப்படம் எல்லோரையும் ஏதோ ஒரு விதத்தில் பாதித்துள்ளது. அதனால் தான் இத்தனை விமர்சனம் வருகிறது. இது ஒரு பரிட்சார்த்த முயற்சி. இப்படத்தை வெற்றி பெறச்செய்த அனைவருக்கும் நன்றி. 
 
 
பாடலாசிரியர் கபிலன் பேசியது… 
 
“உன்ன நினைச்சு, நீங்க முடியுமா” பாடல்கள் பற்றியே நிறைய பேச முடியும். மிஷ்கின்  படங்கள் எல்லாவற்றிலும் நான் எழுதியிருக்கிறேன். அவர் ஒரு பன்முக கலைஞர். அவர் இலக்கியவாதியும் கூட, அவர் கூட பாடல் எழுதுவது எளிதாக இருக்கும். இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. உதயநிதிக்கு நேரடியாக முதல்முறை எழுதியுள்ளேன்.  படம் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. எல்லோருக்கும் நன்றி.  
 
 
நடிகை ரேணுகா பேசியது…
 
இந்தப்படத்த பற்றி சொல்ல நிறைய இருக்கு. நாம நடிக்க ஆசைப்படுகிற  இயக்குநர் பட்டியலில் மிஷ்கின் இருந்தார். ஆனா அவர் பேட்டிகள் பார்த்து அவர் மிக கண்டிப்பானவர் என நினைத்து  பயந்திருந்தேன். ஆனால்  சந்தித்ததும் நான் கண்டிப்பான ஆள் இல்லை என்றார்.  ஷீட்டிங்கில் குழந்தை மாதிரியே இருந்தார். நான் எப்போதும் கொஞ்சம் அதிகமாகவே  நடிப்பேன் ஆனால் அதை கட்டுப்படுத்தி இயல்பாக நடித்தால் போதும் என்றார். இந்தப்படம் நடித்தது மிகப்பெரும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. எல்லோருக்கும் நன்றி. 
 
 
வில்லன்  நடிகர் ராஜ்குமார் பிச்சுமணி பேசியது….
 
எல்லாப்புகழும் இறைவனுக்கே என்பது போல் எல்லாப்புகழுமே மிஷ்கினுக்கே. நான் ஒன்றுமே செய்யவில்லை மிஷ்கின் சார் சொன்னதை மட்டுமே செய்தேன். இவ்வளவு புகழ் கிடைக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. படம் வெற்றி பெற்றுள்ளது. ஆதரித்த அனைவருக்கும் நன்றி. உதய் அண்ணா மிகப்பெரிய மனது கொண்டவர் இப்படத்தில் எனக்கு மிகப்பெரிய இடம் தந்திருக்கிறார். அவருக்கு நன்றி. 
 
 
 
நடிகை நித்யா மேனன் பேசியது. 
 
இந்தப்படம் வெற்றி பெற்றது மகிழ்ச்சி. தரமான சின்ன படங்கள் ஓடும்போதும், உண்மையான உழைப்பு ஜெயிக்கும்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். மிஷ்கின் அவரது கதாப்பாத்திரங்களை மிக அழகாக வடிவமைக்கிறார். அவரை நம்பி ஒரு நடிகர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்தப் படத்தில் நிறைய கெட்ட வார்த்தை பேசும் கேரக்டர் ஆனால்  நிஜத்தில் நான் கெட்ட வார்த்தை பேசியது கிடையாது. அவர் சொன்னதை அப்படியே செய்தேன். இந்தப்படம் நடித்தது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. உதயநிதி, மிஷ்கின் இருவரும் என்னை குழந்தை போல் பார்த்து கொண்டார்கள். இந்தப்படத்திற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. 
 
 
நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசியது…
 
வெற்றிப்படம் தந்து மூணு வருடம் ஆகிவிட்டது. இடையில் சில படங்கள் சரியாக போகவில்லை. அதெல்லாம் மோசமான படங்கள் இல்லை சுமாரான படங்கள் தான். இந்தப்படம் வெற்றியடைந்ததில் மகிழ்ச்சி. இந்தப்படத்தில் ராஜ்குமார் தான் ஹீரோ, நான் ஏதோ கொஞ்ச நேரம் வந்து போகிறேன் அவ்வளவுதான். இந்தபடத்தில் பங்கு கொண்ட இளையராஜா சார், பி சி ஶ்ரீராம் சார் இருவருக்கும்  நன்றி.  நானும் மிஷ்கின் சாரும் முன்னாடியே படம் செய்ய வேண்டியது. அதன் பின்னால் நிறைய கதைகள் இருக்கிறது. இந்தப்படத்தில் அது  நடந்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் அனைவருமே உதவியாளர்கள்  போலவே வேலை செய்தார்கள். நடிகர் ராஜ்குமாரை முன்னால் இருந்தே தெரியும் என்னை விட இந்தப்படத்திற்காக அதிகம் உழைத்தது அவர்தான். அவருக்கு வாழ்த்துகள். நிறைய விமர்சனங்கள் வந்தது நல்லது. படம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. நித்யா மேனனுடன் நடித்தது சவாலாக இருந்தது. சைக்கோ 2 கண்டிப்பாக நடக்கும் என்று நம்புகிறேன் எல்லோருக்கும் நன்றி. 
 
 
நடிகர் நரேன் பேசியது….
 
நான் இன்னும் படம் பார்க்கவில்லை. எல்லோரும் “இந்தப்படம் நல்லாருக்கு”, “பயங்கரமாக பயமுறுத்தியுள்ளார்” என்று சொன்னார்கள்.  அவர் படத்தில் நடிக்க போகும்போதே பயமாகத்தான் இருக்கும். இந்தபடம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.  எல்லோருக்கும் நன்றி. 
 
 
இயக்குநர் மிஷ்கின் பேசியது…
 
சித்திரம் பேசுதடி படம் முதல் இன்று வரை என்னை நல்லபடங்களில் ஆதரித்து மற்ற படங்களில் தலையில் குட்டி அரவணைக்கும் அனைவருக்கும் நன்றி. என் எல்லா வெற்றிகளுக்கும் காரணம் இளையராஜா சார் தான். என் எல்லா வெற்றிகளையும் அவருக்கு சமர்பிக்கிறேன். அவர் பாடல்கள் தான் சினிமாவுக்கு நான் வரக்காரணம். அவருக்கு என் நன்றி. என் தாய் வயிற்றில் பிறந்த தம்பியாக உதயை நினைக்கிறேன். என் சினிமா காதலை புரிந்து கொண்டு என்னை ஆதரித்து என்னுடன் பயணம் செய்துள்ளார். என் வாழ்வில் எப்போது கேட்டாலும் அவருக்கு படம் செய்வேன். என் தங்கையாக என்னை முழுமையாக புரிந்து கொண்ட நடிகை நித்யா மேனன் அவருக்கு இந்த வெற்றி காணிக்கை. என் எல்லா படங்களிலும் அவர் நடிக்க ஆசை. ரேணுகா மேடம் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார் அவரை நிறைய கஷ்டப்படுத்தியுள்ளோம். ஆனால் அவர் ஒரு தேவதை. சிங்கம் புலி மிகச்சிறந்த மனிதர். அவரின் அனுபவங்களில் பாதி கூட எனக்கு இல்லை. ஆனால் என்னை பொறுத்து கொண்டு நடித்ததற்கு நன்றி. நான் கேட்டததற்காக நடித்த இயக்குநர் ராமுக்கு நன்றி. எப்போது கூப்பிட்டாலும் வரும் நடிகர் நரேனுக்கு நன்றி. என் எல்லா படங்களிலும் பாடல் எழுதுபவர் கபிலன். தயாரிப்பாளர் என்னிடம் கதையே கேட்கவில்லை என் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்தார். இந்தப்படம் வெற்றியடைய முக்கிய காரணம் அவர். எடிட்டர் 24 மணி நேரமும் என்னுடனேயே இருந்தார். இந்தியாவின் மிகச்சிறந்த எடிட்டராக வருவார். ராஜ்குமார் என் குழந்தை, இந்த ஐந்து வருடமாக என்னுடனேயே இருந்தவன். கண்ணியமாக சினிமாவை நேசித்தால், ஒரு நல்ல நடிகராக வர நினைத்தால், வெற்றி பெறுவாய் என்று சொன்னேன். அதைக் கேட்டு ஐந்து வருடம் என்னுடனேயே இருந்தான். நான் நினைத்ததை உடனடியாக செய்வான்.  அவனுக்கு கைமாறு செய்யவே இந்தப்படத்தை அவனுக்காக எழுதினேன். அவனுக்காக எடுத்தது தான் இந்தப்படம். இந்தப்படத்தில் அனைவர் மனதையும் கவர்ந்து விட்டான். பி சி ஶ்ரீராம் 10 நாள் என்னுடன் வேலை பார்த்தார் என் வாழ்நாள் கனவு. அவரால்  முழுதாக  வேலை செய்ய முடியவில்லை. தன்வீர் ஒளிப்பதிவாளனாக வேலை செய்தான். அருமையாக வேலை செய்துள்ளான். அதிதி கூட  எப்போதும் சண்டை தான். பயங்கரமாக சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் அவர் நடிப்பு பிரமிப்பாக இருந்தது. அவருக்கு என் வாழ்த்துகள். இந்தப்படம் பிடிக்காதவர்களுக்கும் விமர்சனம் செய்தவர்களுக்கும் நன்றி. படம் பார்த்திருக்கிறீர்கள் எல்லோரது அன்புக்கும் நன்றி.
 
 
Share.

Comments are closed.