“‘பத்துதல’ ஸ்டுடியோ க்ரீனுக்கு மிகப் பெரிய வெற்றியாக அமைய வேண்டும்” – நடிகர் சிலம்பரசன்!

0

 81 total views,  1 views today

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய ‘பத்துதல’ திரைப்படம் மார்ச் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை ஒட்டி பத்திரிகையாளர்கள் சந்திப்பு  நடந்தது.

படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா பேசியதாவது, “கோவிட் உள்ளிட்டப் பல தடைகளைத் தாண்டி இந்தப் படத்தை சிறப்பான ஒன்றாக இயக்குநர் கிருஷ்ணா கொடுத்திருக்கிறார். ’சில்லுன்னு ஒரு காதல்’ மூலம் எங்கள் பயணம் தொடங்கியது. இந்தப் படம் இன்றளவும் பல குடும்பங்களுக்குப் பிடித்த ஒன்று. அந்தப் படத்திற்குப் பிறகு இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் கிருஷ்ணாவுடன் இணைவதில் மகிழ்ச்சி. படம் நிச்சயம் வெற்றியடையும். ரஹ்மான் சாருடன் எனக்கு இது மூன்றாவது படம். தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. சாயிஷாவுக்கு ஸ்பெஷல் நன்றி. தமிழ்நாட்டின் ரன்பீர் கபூர் என்று சொல்லும் அளவுக்கு வசீகர்ம் கெளதம் கார்த்திக்கிடம் இருக்கிறது. எனக்கு சூழ்நிலை சரியில்லாதபோது படம் எஸ்.டி.ஆர். எனக்கு பண்ணி கொடுத்தார். அவருக்கும் நன்றி. கமல்ஹாசன் சார் தயாரிப்பில் அடுத்து நடிக்க இருக்கும் படத்திற்கும் அவருக்கு வாழ்த்துகள்!”.

இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா பேசியதாவது, “பலரும் இந்தப் படம் நன்றாக வரவேண்டும் என்று நினைத்தார்கள். அதன் பிரதிபலிப்புதான் இது. மிகப்பெரிய பொருட்செலவில் இதனை ஞானவேல்ராஜா எடுத்திருக்கிறார். முதல் 15 நாட்கள் எடுத்துவிட்டு பிறகு, மீண்டும் ரீஷூட் செய்ய வேண்டும் என்பது சாதாரண விஷயம் கிடையாது. எஸ்.டி.ஆர்.ரை வைத்து படம் செய்வது சாதாரணம் கிடையாது. ஏனெனில், பார்வையாளர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும். அதை நாம் திருப்திப்படுத்த வேண்டும். இது சிம்புவால் எனக்கு எளிதானது. செட்டில் வரும்போதே அவர் ஏ.ஜி.ஆர்ராகவே வாழ்ந்தார். இதற்காக என் நண்பன் எஸ்.டி.ஆர்.ருக்கு வாழ்த்துகள். கெளதம் கார்த்திக்கை நிறைய கொடுமைப் படுத்தி இருக்கிறேன். ஆக்‌ஷன், புழுதி என கடினமான சூழலில் அவருக்கு படப்பிடிப்பு நடத்தினோம். சிறப்பாக செய்திருக்கிறார். கெளதம் மேனன் என்னுடைய பாஸ். சிறப்பான வில்லன். இதுவரை பார்த்திராத ஒரு புதுமுகத்தைப் பார்க்கலாம். பிரியா பவானி ஷங்கருக்கும் நன்றி. எஸ்.டி.ஆர்ருக்கு தங்கை கதாபாத்திரம் நடிக்க தென்னிந்தியாவில் ஒரு நடிகையும் தயாராக இல்லை. ஒத்துக் கொண்ட ஒரே நடிகை அனுசித்தாரா மட்டும்தான். அவருக்கும் நன்றி. மனுஷ்யபுத்திரனுக்கு கவிதை, அரசியல் என பல தளங்கள் காத்திருந்தும் என் நட்புக்காக ஓடிவந்தார். மதுகுருசாமிக்கும் நன்றி. கேட்டதும் சாயிஷா உடனே ஒத்துக்கொண்டு இந்தப் பாடலை செய்து கொடுத்தார். இந்தப் பாடல் இவ்வளவு நன்றாக வரக் காரணம் சாயிஷா, ரஹ்மான் இசை, பிருந்தா மாஸ்டர் மூவரும்தான். இப்போது படத்தின் பின்னணி இசையை ரஹ்மான் சார் செய்து கொண்டிருக்கிறார். அது நிச்சயம் பேசப்படும்.என் தொழில்நுட்பக் குழு என்னுடைய பலம். அவர்கள் அனைவருக்கும் நன்றி”
வசனகர்த்தா ஆர்.எஸ். ராமகிருஷ்ணா பேசியதாவது, “கிருஷ்ணா நல்ல இயக்குநர் என்பதையும் தாண்டி நல்ல மனிதர். அவரிடம் எப்போதும் ஒரு செண்டிமெண்ட் உண்டு. அவர் வைத்து படம் செய்கிறவர்களுக்கு கண்டிப்பாக கல்யாணம் நடக்கும். அதுபோல நல்லது நடக்கும் என எதிர்பார்க்கலாம். ரஜினி சாரும் கமல் சாரும் கலந்த கலவையாகதான் சிம்பு சாரை பார்க்கிறேன். இந்தப் படத்தில் ‘நாயகன்’ கமல் சாரையும், ‘தளபதி’ ரஜினியையும் பார்ப்பீர்கள். ’பத்து தல’ தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு ட்ரேட் மார்க்காக இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துகள்”.

அடுத்ததாக, ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே. பாட்ஷா, “டீசர், ட்ரைய்லரில் பார்த்தது போல, படத்திலும் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக வந்திருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் சிம்பு மிகவும் ஈடுபாட்டோடு நடித்துக் கொடுத்தார். ஆதரவு கொடுத்த தொழில்நுட்பக் குழு அனைவருக்கும் நன்றி”.

நடிகர் கண்ணன் பொன்னையா பேசியதாவது, “’பத்து தல’ ஒரு மாஸ் எண்டர்டெயினர் படம். இந்தப் படத்தை அதிக பொருட்ச்செலவில் எடுத்துள்ளனர். இந்த மூன்று வருடத்தில் தயாரிப்பாளர் எங்களை நன்றாக பார்த்துக் கொண்டார். அனைத்து நட்சத்திரங்களுக்கும் சமமான காட்சிகள் கொடுத்த இயக்குநர் கிருஷ்ணா திறமையானவர். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்திற்குப் பிறகு என்னை நியாபகம் வைத்துக் கொண்டு ‘பத்து தல’ படத்தில் சிம்பு வந்து என்னிடம் பேசினார். கெளதம் கார்த்திக் திறமையானவர். இந்தப் படத்தில் வேறு ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக இருப்பார். பிரியா பவானி ஷங்கர் படத்தில் பவர்ஃபுல்லான லேடியாக வருவார். இந்தப் படம் எனக்கு நல்ல அடையாளம் கொடுக்கும் என நம்புகிறேன்”.

எழுத்தாளர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேசியதாவது, “சினிமா மேடை எனக்கு புதிதானது. நண்பர் கிருஷ்ணாவுக்காக ஒத்துக் கொண்டேன். சினிமாவை வெளியில் இருந்து பார்த்த எனக்கு உள்ளிருந்து வேலை செய்வது புதிதாக இருந்தது. இந்தப் படம் மாஸ் எண்டர்டெயினராக வர இயக்குநரும் குழுவும் அவ்வளவு உழைப்பைக் கொடுத்துள்ளார்கள். ஆக்‌ஷன் சொன்னதும் எஸ்.டி.ஆர். வேறொருவராக மாறி விடுவார். நடிப்பு அவரது இரத்தத்தில் ஊறி இருக்கிறது. ரஹ்மான் சார் இசையில் நான் பாட்டெழுததான் ஆசைப்பட்டேன். ஆனால், நடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. படம் வெற்றியடைய வாழ்த்துகள்”

நடிகர் சவுந்தர்குமார் பேசியதாவது, “இந்தப் படம் நான் ஒத்துக்கொள்ள முக்கிய காரணம் எஸ்.டி.ஆர்., இயக்குநர் கிருஷ்ணா மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் சார். ரசிச்சு ரசிச்சு பார்த்த எஸ்.டி.ஆருடன் படம் முழுக்க அவருடன் இணைந்து நடிக்கப் போகிறேன் என்றதும் மகிழ்ச்சியாக இருந்தது. பிறகு நான்கு நாட்களில் அழைப்பு வரவில்லை. இயக்குநரை மீண்டும் சந்தித்தேன். சின்ன ரோல் இருக்கிறது என்று சொன்னார். ’அடுத்தப் படங்களில் பெரிய வாய்ப்பு வேண்டும்’ என்ற வேண்டுகோளோடு ஒத்துக் கொண்டேன். இயக்குநர் எந்தவித டென்ஷனும் இல்லாமல் அழகாக படத்தை முடித்துக் கொடுத்துள்ளார். மிகப்பெரிய பாடம் கற்றுக் கொண்டேன். ஞானவேல் சார் கதை பிடித்திருந்தால் படத்தை எடுத்துக் கொள்ளக்கூடியவர். படத்தின் அடுத்த பார்ட் வரவேண்டும்”

நடிகர் ரெடின் கிங்க்ஸ்லே பேசியதாவது, “பத்து வருடங்களுக்கு முன்பே சிம்பு சாருடன் ‘வேட்டை மன்னன்’ நடித்து வெளி வந்திருக்க வேண்டும். ஆனால், ‘பத்து தல’யில்தான் அது அமைந்திருக்கிறது. வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள். கெளதம் சார் நாலு மணிக்கே எழுந்து ஆக்‌ஷன் காட்சிகளுக்கு தயாராவார். அப்படியான திறமையான நடிகர் அவர். ரஜினி சாரிடமும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடையும் என சொல்லி இருக்கிறேன். அனைவருக்கும் நன்றி”.

நடிகை சாயிஷா பேசியதாவது, “நான் மீண்டும் என் வீட்டுக்கு வந்தது போல ஒரு உணர்வு ‘பத்து தல’ படப்பிடிப்பில் ஏற்பட்டது. இந்த சூப்பரான பாடலை ரஹ்மான் சார் இசையில் பிருந்த மாஸ்டர் நடன அமைப்பில் கொடுத்ததற்கு நன்றி. கெளதம் இந்தப் படத்தில் வேறு நபராக இருக்கிறார். அவரது உழைப்புக்கு வாழ்த்துகள். எஸ்.டி.ஆருடன் நான் சேர்ந்து நடித்ததில்லை. ஆனால், அவரது இந்தப் படத்தில் நானும் ஒரு அங்கம் என்பது மகிழ்ச்சி. கடைசியாக எனக்கு எல்லாவிதமான ஆதரவும் கொடுத்த என் கணவர் ஆர்யாவுக்கு நன்றி. அவர் சொல்லிதான் இந்தப் பாடல் நான் செய்தேன். அவரைப் போன்ற ஒரு கணவர் கிடைத்ததுக்கு நான் கொடுத்திருக்க வேண்டும். உங்கள் அனைவருக்கும் இந்தப் பாடல் நிச்சயம் பிடிக்கும்”.

நடிகர் மதுகுருசாமி பேசியதாவது, “கன்னட ‘மஃப்டி’ படத்தில் சிங்கா எனும் கதாபாத்திரத்தை தமிழிலும் நான் நடித்திருக்கிறேன். கன்னடத்தில் நிறைய படங்கள் நடித்திருக்கிறேன். தமிழில் ‘பத்து தல’ என் முதல் படம். இந்த வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர் ஞானவேல் சாருக்கு நன்றி. கிருஷ்ணா சார் ‘பத்து தல’ படத்தை அருமையாக எடுத்திருக்கிறார். எஸ்.டி.ஆர். சாரிடம் இருந்து நிறைய கற்றுள்ளேன். உங்கள் அனைவருக்கும் படம் கண்டிப்பாக பிடிக்கும்”.

நடிகர் கெளதம் கார்த்திக் பேசியதாவது, “’பத்து தல’ படத்தில் எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. கிருஷ்ணா சாரும் அவரது டீமும் அருமையாக வேலை பார்த்திருக்கிறார்கள். என்னுடைய மொத்தத் தோற்றத்தையுமே மாற்றி இருக்கிறார்கள். இந்த கதாபாத்திரத்தில் என்னை பார்க்கும்போதே பெருமையாக இருக்கிறது. என்னை கொடுமைப் படுத்தி இருப்பதாக இயக்குநர் சொன்னார். இந்த தொழிலுக்கு வந்துவிட்டு வேலைப் பார்ப்பதை எப்போதும் நான் கொடுமையாகவே நினைத்தது இல்லை. நான் பிறப்பதற்கு முன்பே என் தாத்தா இறந்து விட்டார். அவரது தொழிலில் நான் இறங்கி பார்க்கிறேன் என்றால் அதை விட வேறு சந்தோஷம் இல்லை. இது என் கோயில். அதுதான் எனக்கு சாப்பாடு போடுகிறது. அதற்காக எந்த விஷயத்தையும் நான் தாங்கிக் கொள்வேன். சாயிஷாவுடன் நடனம் ஆட பயமாக இருந்தது. சாயிஷாவுக்கு இணையாக நடனம் ஆட முடியாது என பிருந்தா மாஸ்டரிடம் கேட்டு எனக்கு நடனத்தைக் குறைத்துக் கொண்டேன்.
அடுத்து சிம்பு அண்ணன். இசை வெளியீட்டு விழாவில் அவர் என்னைப் பற்றி பேசியதை கேட்டு நான் அழுதுவிட்டேன். அவருடைய ரசிகர்களில் நானும் ஒருவன். படப்பிடிப்புத் தளத்தில் வேலையையும் மீறி அவர் என்னிடம் சில கதைகளை சொன்னார். அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. என்ன கதாபாத்திரம் என்றாலும் சரி அவர் எப்போது கூப்பிட்டாலும் சம்பளமே வாங்காமல் செல்லத் தயாராக இருக்கிறேன். கூப்பிடுங்கள் அண்ணா. திரையரங்குகளில் ‘பத்து தல’ பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

நடிகர் சிலம்பரசன் பேசியதாவது, ““அன்று இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை சந்தித்தேன். பத்திரிக்கையாளர்களை அங்கு சந்திக்க முடியவில்லை என்பதால், இன்று இங்கு வந்தேன். சிம்பு வருவேனா என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். அப்படி எல்லாம் இல்லை. வந்துவிட்டேன் நான். மேடையில், அன்று கெளதம் மேனன் சார் பற்றி மேடயில் பேச மறந்துவிட்டேன். எனக்குத் தெரிந்து ‘விடிகே2’ பண்ண முடியுமா என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு இப்போது வரும் பல படங்களிலும் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். ’பத்து தல’ வந்தால் இந்த எண்ணிக்கை இன்னும் அது அதிகமாகும். அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. மதுகுருசாமி தன்னை நடிப்பிற்காக தன்னை தயாராக்கிக் கொண்டவர். அவருக்கான இடம் காத்திருக்கிறது. ஒளிப்பதிவாளர், வசனகர்த்தா அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் பல நடிகர்கள் இருக்கிறபோது எப்படி அவர்களை சமாளிக்கப் போகிறார் இயக்குநர் என்ற கேள்வி இருந்தது. ஆனால், சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்திற்குப் பிறகு இத்தனை நடிகர்களுக்கு திரையில் சரியான இடம் கொடுத்து, இயக்குநர் கிருஷ்ணா இந்தப் படத்தை முடித்திருக்கிறார். அவரது திறமைக்கு சரியான இடம் உண்டு. சாயிஷா அருமையாக நடனம் ஆடி இருக்கிறார். ’பத்து தல’ படம் நான் ஒத்துக் கொள்ள முக்கியக் காரணம் கெளதம் கார்த்திக்தான். எந்தவிதமான கஷ்டத்தையும் ஜாலியாக எடுத்துக் கொள்வார். அந்த குணத்துக்காகவே அவர் பெரிய இடம் அடைய வேண்டும். இந்தப் படத்தில் அவரது ஆக்‌ஷன் காட்சிகளை ரசித்து பார்த்தேன். கஷ்டமான ஆக்‌ஷன் காட்சிகளை ரொம்பவே எளிதாக செய்துள்ளார். தயரிப்பாளர், என் நண்பர் ஞானவேல் ராஜாவுக்கு நன்றி. ஸ்டுடியோ க்ரீனுக்கு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியாக அமைய வேண்டும். ‘வேட்டை மன்னன்’ படக் காலத்திலேயே ரெடின் கிங்க்ஸ்லியை ரசித்து பார்த்தேன். அவருடைய உயரம் எனக்கு மகிழ்ச்சி. தனஞ்செயன் சார் சொன்னால் கேட்பேன் என்று சொல்கிறார்கள். அவருடைய அன்புக்கு நான் அடிமை. ரஹ்மான் சார் பல பிஸி ஷெட்யூலுக்கு மத்தியில் இந்தப் படத்தின் இசையை முடித்துக் கொடுத்திருக்கிறார். அவருடைய அன்புக்கு நன்றி” என்று வாழ்த்தினார் சிம்பு.

Share.

Comments are closed.