1,060 total views, 1 views today
ரஜினிகாந்த் ரசிகர்களுக்காக, தீவிர ரஜினி ரசிகர் ஒருவரால் உருவாக்கப்பட்ட படத்துக்கு ரஜினியின் பிறந்த தேதியையே தலைப்பாக வைத்திருக்கிறார்கள். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நான்கு நண்பர்களுக்குக்கூட முத்து, பில்லா, வீரா, எஜமான் என்று ரஜினி நடித்த படத்தின் பெயரையே வைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு ரஜினிமயமான படமாக மலர்ந்திருக்கிறது 12-12-1950.
நண்பர்கள் நால்வரும் சிறையிலிருக்கும் தங்கள் மாஸ்டரை, கபாலி படம் வெளியாகும் தினத்தன்று பரோலில் எடுத்து வந்து படம் பார்க்க வைக்கத் திட்டமிடுகின்றனர். இதற்காக இதற்காக சிறை கண்காணிப்பாளரை பிளாக் மெயில் செய்து ஒரு வழியாக காரியத்தை சாதிக்கின்றனர். பரோலில் இருக்கும்போது நடிகர் ஜான் விஜய் மூலம் ரஜினியை சந்திக்கவும் ஏற்பாடு செய்கிறார்கள். இறுதியில் அந்த சந்திப்பு நிகழ்ந்ததா இல்லையா என்பதற்கான பதில் கடைசி காட்சியில் இருக்கிறது.
ரஜினியை மையப்புள்ளியாகக்கொண்டு கதை அமைந்திருப்பதால் கதையை நகர்த்துவதிலும் காட்சியை அமைப்பதிலும் உள்ள சிரமங்கள் படத்தைப் பார்க்கும்போது நன்கு தெரிகிறது. ஆயினும் ஒரு எளிமையான கதையை அலுப்புதட்டாத வகையில் அழகாக கொண்டு செல்கிறார் இயக்குநர் கபாலி செல்வா.
சிறையிலிருக்கும் ரஜினியின் தீவிர ரசிகராகவும் கபாலி செல்வா சிறப்பாக நடித்திருக்கிறார். பல படங்களில் கதாநாயகனாக நடித்த செல்வா, முதல் முறையாக இயக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அந்த வேடம் படத்தின் இரண்டாம் பாதியில்தான் வருகிறது. கதைக்குத்தான் முக்கியத்துவமே தவிர, தனக்கல்ல என்பதை உணர்ந்து செயல்பட்டதற்காகவே அவருக்கு தனியாக ஒரு பாராட்டு.
கமல்ஹாசன் படத்தில் நடித்த கெட்-அப்களில் வந்து அமர்களப்படுத்தும் தம்பி ராமைய்யா படத்துக்கு கலகலப்பூட்டுகிறார்.
ராமேஷ் திலக் யோகி பாபு, ஆதவன் என்று படத்தில் நடித்த பலரும் தங்கள் வேடத்தை சிறப்பாகவே செய்திருக்கின்றனர்.
விஷ்ணுவின் ஒளிப்பதிவும், ஆதித்யா சூர்யாவின் இசையும் படத்துக்குக பக்க பலமாக இருக்கின்றன.
மாஸ்டருக்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காக 100 வயது முதியவர் ஒருவரை நண்பக்கள் கொல்லத் துணிவார்களா
ஒருவர் சிறையில் இருக்கிறரா் என்பதற்காக அவரது மனைவிக்கு வேறு கல்யாணம் செய்து வைப்பார்களா…. இப்படியெல்லாம் கேள்விகள் வராத அளவுக்கு காட்சியை அமைத்து கதையை இன்னும் வலுவானதாக அமைத்திருந்தால் ரஜினி ரசிகர்களை மட்டுமின்றி எல்லா தரப்பினரையும் கவரும் படமாக அமைந்திருக்கும்.