780 total views, 1 views today
கசட தபற – விமர்சனம்
மணம் வீசும் ஆறு மலர்கள்….
அவற்றை ஒன்றாகத் தொகுத்துக் கட்டிய அழகான கதம்பமாலை….
.
இதுதான் கசட தபற திரைப்படம்.
ஆறு தனித்தனி கதைகள். ஆனால் இவை அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உள்ளவை. அந்தத் தொடர்பும் மிக அழகாக பின்னப்பட்டிருக்கிறது. கத்தி மேல் நடக்கும் வித்தை மாதிரியான வேலைதான் என்றாலும் கச்சிதமாக செய்திருக்கிறார் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கும் சிம்பு தேவன்.
ரெஜினா கேசாண்ட்ரா பிரேம்ஜி வரும் முதல் பகுதியே நிமிர்ந்து உட்கார வைக்கிறது. பிரைம்ஜி மீது திருட்டுப் பட்டம் கட்டி தாதா சம்பத் காதலை எப்படி முறித்தார் என்பது அடுத்த பகுதியில் விளக்கப்படுகிறது. தொடர்ந்து தாதாவுக்கு அவரது மகனே எப்படி முடிவு கட்டி தந்தையின் இடத்தில் அமர்கிறான் என சீராகச் செல்லும் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் எதிர்பாரா திருப்பமும், யூகிக்க முடியாத கதையோட்டமும் வெகுவாக ரசிக்க வைக்கிறது.
ஆறு பகுதிகளுக்கும் ஆறு ஒளிப்பதிவாளர்கள் என்றாலும் ஒருவரே படமாக்கியதுபோல் ஒரே டோனில் இருப்பது சிறப்பு.
ஆறு இசையமைப்பாளர்கள் இருந்தாலும் பாடலுக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதேபோல் ஆறு எடிட்டர்கள் படத்தைத் தொகுத்திருந்தாலும், ஒரு கம்பிக்குள் ஆறு வளையங்கள் சிக்கலின்றி நுழைவதுபோல் அழகாக ஒட்டுமொத்த படமும் தொகுக்கப்பட்டிருக்கிறது.
வெங்கட் பிரபுவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு அவர் மனைவி வந்து சிறையில் பார்க்கிறார். வார்டன் திரும்ப வெங்கட் பிரபுவை உள்ளை அழைத்துச் செல்ல, அவர் மனைவியும் சோகத்துடன் புறப்பட்டுச் செல்லும்போது, திடீரென என்னவோ நினைத்துக் கொண்டவராக திரும்பி வேகமாக வந்து பார்க்கும்போது, கணவரை சந்தித்த இடம் வெற்றிடமாக இருப்பதைப் பார்க்கும் காட்சி மனதை பிழிகிறது.
முதல் பகுதி கதையில் ரெஜினா கேசண்டாரா சான்றிதழ் பைலுடன் அதிகப்படியான ஒரு பாக்கெட்டை பிரேம்ஜி தவறுதலாகக் கொடுப்பதும், அது தன்னுடையது இல்லை என்று ரெஜினா மறுப்பதும் அவ்வளவாக கவனம் பெறாத விஷயம் என்றாலும், கடைசி பகுதி கதையில் அந்த பாக்கெட் முளைத்து முக்கியத்துவம் பெறுவதுடன் கதைக்கே திருப்பு முனையாக அமைவதும் சிறப்புதான் என்றாலும், மருந்துக் கம்பெனி நடத்துபவரை சிறைக்குச் செல்லும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பைல் பாக்கெட்டை அவ்வளவு அலட்சியமாக யாரோ எடுத்துப்போவதுபோல் டேபிள்மேல் வைத்திருப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது.
அரைத்த மாவையே திரும்பத்திரும்ப அரைத்துக் கொண்டிராமல் இது போன்ற புதிய முயற்சிகளை அதுவும் தரமான முறையில் சொல்லப்ட்ட போன்ற படங்களை ரசிகர்கள் ஆதரித்தால்தான் தமிழ் சினிமா தலை நிமிரும்.
‘கசட தபற‘ மதிப்பெண் 4/5